என் பெயர் கற்பகம், நான் வேலூர் மாவட்டத்தில் வசிக்கிறேன். எனது கணவர் பெயர் முருகன். எனக்கு திருமணம் ஆகி இப்பொழுது மூன்று ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. எனது முதலாவது குழந்தை ஏழு மாதத்தில் பிறந்து இறந்து விட்டது. பிறகு இரண்டாவது குழந்தை ஒரு மாதத்தில் கருச்சிதைவு ஆகிவிட்டது. பிறகு எனக்கு குழந்தை உண்டாகவில்லை. இதற்கு இடையில் நான் எனது திருமணத்திற்கு முன்பு கல்லூரி நாட்களில் இயேசப்பா பற்றி தெரிந்து கொண்டேன். ஆனாலும் எனக்கு ஆண்டவரைப் பற்றி முழுமையாக தெரியாது. திருமணத்திற்கு பிறகு தற்செயலாக JASJEMI யூடூப் சேனலை பார்த்தேன். ஆரம்பத்தில் 20 வீடியோக்கள் இருக்கும் போதிலிருந்து பார்க்க ஆரம்பித்தேன். நான் ஆண்டவரை பற்றி நிறைய காரியங்களை தெரிந்து கொண்டேன். நான் சோர்ந்து போகும்போதெல்லாம், உங்களது வீடியோக்கள் எனக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும், இருந்தது. நான் வாட்ஸ் அப்பில் ஜெப விண்ணப்பங்களை அனுப்பினேன். பிறகு உங்களது உபவாச வீடியோ, மற்றும் வாக்குத்தத்தை சுதந்தரிப்பது எப்படி என்ற வீடியோக்களை பார்த்தேன்.நான் காலையில் ஒருமுறை மாத்திரம் உபவாசம் இருந்தேன். இந்த 2023 ஆம் வருடம் தேவன் எனக்கு தந்த வாக்குத்தத்தை சொல்லி ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் மிகவும் விசுவாசத்தோடு இருந்தேன். தேவன் என்னை நினைவு கூர்ந்தார். நான் இப்பொழுது இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் ஊழியங்களை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. தொடர்ந்து எனக்காகவும் நான் நல்ல முறையில் குழந்தை பெற்று எடுக்க வேண்டிக் கொள்ளுங்கள். கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மட்டுமே மகிமை உண்டாவதாக ஆமென்.