கிறிஸ்துவினுடைய அன்பின் ஆழம்,அகலம்,நீளம்,உயரம் என்பது
“அவர் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்” என்ற புரிதல் தான்.
சிறுவயதில் நான் கேட்டதையெல்லாம் அவர் தந்த போது அவருடைய அன்பை “கேட்டதை தருபவர்” என்று சிறிதளவு மட்டுமே புரிந்து வைத்திருந்தேன். என் அப்பா பெலவீனம், என்னுடைய படிப்பில் பிரச்சனை, இப்படி படிப்படியாக ஒவ்வொரு பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ளும்போது, சில நேரம் இது எதற்காக என் வாழ்க்கையில் வந்தது என்ற ஒரு கேள்வியும் வரும். சிலநேரம் அவர் நம்மேல் அன்பாய் இருந்தால் ஏன் இதையெல்லாம் அனுமதித்தார் என்ற கேள்விக்கூட வரும்.
1. ஒருவரும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை தேவன் தீர்த்த போது, அவர் எங்கள் மேல் வைத்த அன்பை பற்றிய புரிதல் கொஞ்சம் அதிகரித்தது. என்னுடைய வியாதியின் நேரத்தில்தான் தேவனுடைய அன்பை அதிகளவு உணர்ந்து கொண்டேன். அதற்கு முன்பு வரை மிக சுறுசுறுப்பாக இருந்து வந்தேன். திடீரென்று 15 வயதில் எனக்கு அல்சர் வந்தது. ஒன்னுமே சாப்பிட முடியவில்லை. ஒழுங்காக சாப்பிடாததால் அது இன்னும் அதிகரித்தது. எப்போதுமே ஒரு மயக்க நிலையிலேயே இருப்பது போன்ற ஒரு உணர்வு வரும். என்னுடைய சிறுவயதில் கர்த்தர் எனக்கு ஒரு வியாதியை தந்து விட்டாரேன்னு ஆரம்பத்தில் எனக்கு ஒரு கோபம் கூட இருந்தது.ஆனால்,போக போக ஒன்றை நான் கவனித்தேன். முன்பு எப்பவாவது தேவனுடைய பிரசன்னத்தை உணருவேன்.நானும் எப்போவாவது ஜெபிப்பேன். ஆனால், வியாதியாயிருந்த போது எப்போதுமே தேவன் என்னை தாங்கிக் கொண்டிருப்பதை நான் உணர ஆரம்பித்தேன். School Assembly prayer ல ஒரு 20 நிமிஷம் தினமும் நிற்கணும். அந்த நேரத்தில் கூட என்னால் நிற்க முடியாது. இயேசுவே,நீர் வந்து என் பக்கத்தில் நிற்க வேண்டும்.நீர் வராவிட்டால் நான் மயங்கியே விழுந்துவிடுவேன்னு கூப்பிடுவேன். Assembly ல சில பிள்ளைகள் ஒரு நாள் அவசரத்தில் சாப்பிடாமல் வந்து மயங்கி கீழே விழுவார்கள்.நானோ எல்லா நாளும் சாப்பிடாமல் தான் போவேன்.எல்லா நாளும் என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நான் சாப்பிடவேண்டும் என்று நிறைய முயற்சி எடுப்பார்கள்.கொஞ்சங்கூட காலை நேரத்தில் சாப்பிட முடியாது.அப்படி சாப்பிட்டால் வாந்தி வரும்.அது போன்ற கொடுமையான காலம். ஆனால்,ஒருநாள் கூட நான் மயங்கி விழவேயில்லை.நான் அங்கு
நிற்கவில்லை என்பது மட்டும் 100% தெரியும்.
ஏனென்றால், எனக்கு பெலனே இல்லை. தேவன் என்னோடு எல்லா நேரமும் இருப்பதை,நான் கூப்பிடும் போதெல்லாம் அவர் என்னை தாங்குவதை, உணர்ந்தேன், அவர் அப்போது உடனே எனக்கு இரங்கி பரிபூரண சுகம் தரவில்லை.கிட்டத்தட்ட 7 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால்,தேவன் என்மேல் வைத்த அன்பை அணு அணுவாய் உணர்ந்தேன். சிறு வயதில் இந்த வியாதி என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு அவர் என்மேல் வைத்த அன்பின் புரிதல் எனக்கு ரொம்ப இல்லை. ஆனால், அப்போது நான் கேட்டதையெல்லாம் தேவன் தந்து கொண்டே தான் இருந்தார். இருந்தாலும் அவர் என்மேல் வைத்த அன்பின் புரிதல் எனக்கு சிறிதளவே இருந்தது. ஏன் எங்கள் குடும்பத்தில் (அ) என் தனிப்பட்ட வாழ்க்கையில் இவ்வளவு தோல்விகள், ஏமாற்றங்கள், கண்ணீர்கள், இதெல்லாம் நீர் ஏன் அனுமதித்தீர் என்று ஆரம்பத்தில் ஒரு விதமான கசப்பு, கோபம் வந்தது. சிறு வயதிலிருந்தே நான் தேவனை அதிகமாக நேசித்தேன், என் குடும்பத்தினரும் தேவனை அதிகமாக நேசித்தார்கள்.இந்த சூழ்நிலையிருந்து வெளியே மறுபடியும் வர முடியுமா? என்று அநேக நேரம் நினைத்திருக்கிறேன். இதெல்லாம்
வந்தாலும்,அவ்வளவு தான் இனி வாழ்க்கையில் சந்தோஷமே இருக்காது,எல்லாமே முடிந்துவிட்டது என்று நினைத்து நாம் அழும்போது,அவரும் நம்மோடு சேர்ந்து அழுகிறார். உதாரணமாக லாசரு விஷயத்தில் இயேசு அழுவது மட்டுமில்லாமல் லாசருவை அதிலிருந்து தூக்கி விடுகிறார்.
சில நேரம் மறுசீரமைப்பு என்று சில கட்டடங்களுக்கு பண்ணுவாங்க. பாக்கவே நல்லா இருக்காது, பாழடைந்த கட்டடமாய் இருக்கும். ஆனால், அதற்கு கைத்தேர்ந்த நிபுணர்கள் அந்த வேலையை எடுத்து செய்யும் போது, அது கொஞ்சம் காலம் ஆகும்.ஆனால்,பின்பு ஒரு அழகான கட்டடமாய் உருமாற்றம் அடையும்.
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். (ஏசாயா 60:15). இந்த மாதிரி செய்யும்போது, Wow இவ்வளவு மோசமான நிலையில் இருந்த என்னை,தேவன் எப்படியெல்லாம் மாற்றுகிறார் என்று அவருடைய அன்பின் புரிதல் நமக்கு அதிகமாகும்.அவர் எப்போதும் அன்பாகவே இருக்கிறார். என்மேல் இவ்வளவு தேவன் அன்பு வைத்திருக்கிறார் என்ற புரிதல் நமக்கு ஒரே நாளில் கிடைப்பதில்லை. படிப்படியாக நாம் அனுபவிக்கும்போது நம்முடைய புரிதலும் அதிகமாகிறது. அநேக நேரத்தில் இந்த புரிதல் நல்ல காலங்களை விட மோசமான காலத்தில் தான் அதிகமாக நமக்கு கிடைக்கிது.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!!