நேர்வழியாய் உன்னை நடத்துவார்..
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.
ஆதியாகமம் 24:48
இது எலியேசர் சொன்ன வார்த்தை..
அன்றைக்கு அவருடைய வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய பொறுப்பு அவருடைய கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இது சரியாக நடக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் மேல் மாத்திரம் தன் நம்பிக்கையை வைத்து, அந்தக் காரியத்தை ஆரம்பித்தார் எலியேசர். கர்த்தரிடம் மிகப்பெரிய அடையாளத்தையும் கேட்டு ஜெபித்திருந்தார். ஈசாக்குக்கு பெண் பார்க்கும்படியாக ஒரு மிகப் பெரிய பொறுப்பை ஆபிரகாம் எலியேசர் கையில் ஒப்படைத்திருந்தார். அதுவும் சில நிபந்தனைகளோடு, இந்த இடத்தில்தான் என் பையனுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லியிருந்தார் ஆபிரகாம். எலியேசருக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. ஒருவேளை தவறான ஒரு பெண்ணை என் எஜமானுடைய பையனுக்கு நான் கொண்டு போய் விடுவேனோ என்று. எனவே ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கர்த்தர் முன்பாக வைத்து இதன்படி செய்யும் பெண் எவளோ அவளையே நான் என் எஜமான் இடத்திற்கு கூட்டி செல்வேன் என்று கர்த்தரிடம் ஜெபித்து இருந்தார்.
நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
ஆதியாகமம் 24:14
நம்முடைய தேவன் எப்போதுமே நம் ஜெபத்தைக் கேட்கிற தேவன். நம்முடைய இருதயத்தின் பயங்களை அறிந்திருக்கிற தேவன். ஒருவேளை நீங்களும் இதேபோல உங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய ஆரம்பித்திருக்கலாம். நாம் ஆரம்பித்த இந்த காரியம் நாம் சரியாக செய்து முடிப்போமா? இல்லையா? இது தோல்வியில் முடியுமா? இது செய்யத்தக்க சரியான ஞானம் நமக்கு இருக்கிறதா? என்கிற ஒரு பயத்துடன் இந்த வருடத் துவக்கத்தில் நீங்கள் இருக்கலாம். ஆனாலும் கர்த்தர் இன்று நம்மைப் பார்த்து சொல்லுகிற வார்த்தை “நேர்வழியாய் உன்னை நடத்துவேன்”. கோணலான வழிகளாய் இருக்கிற எல்லா வழிகளையும் நேர்வழியாய் மாற்ற நம்முடைய கர்த்தரால் முடியும். எந்தெந்த நேரத்தில் யார் யாரை சந்திக்க வைக்க வேண்டுமோ அவர்களை சரியான நேரத்தில் சந்திக்க வைக்க கர்த்தரால் முடியும். ஆவியானவர் ஒருவரே. எப்போதெல்லாம் நாம் அவருடைய உதவியை நாடுகிறோமோ, அப்போதெல்லாம் நமக்கு உதவி செய்து நம்மை நேர்வழியில் நடத்த அவர் வல்லவராய் இருக்கிறார்.
கர்த்தரிடம் நீங்கள் கேட்டுக்கொண்ட அடையாளங்கள் ஒருவேளை உங்கள் பார்வைக்கு இதெல்லாம் நடக்குமா என்ற அளவுக்கு மிகவும் கஷ்டமான ஒரு அடையாளத்தை கூட நீங்கள் ஆண்டவரிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவரால் செய்ய கூடாத காரியம் ஒன்றுமே இல்லை. மனுஷரால் இது கூடாது தான், ஆனால் தேவனாலே எல்லாம் கூடும். தேவனாலே உங்கள் காரியத்தை வாய்க்க பண்ண அவரால் முடியும். நீங்கள் ஆரம்பித்த பிரயாணத்தை வெற்றியோடு முடிக்க பண்ண கர்த்தரால் முடியும்..
நீங்கள் ஆரம்பித்த தேடுதலை, எதைத்தேடி உங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தீர்களோ அந்த புதையலை கண்டுபிடிக்க தேவன் உங்களுக்கு நேரான வழியை காண்பிப்பார். தம்முடைய தேவதூதர்களை உங்கள் முன்பாக அனுப்பி எல்லா கோணலான வழிகளையும் செவ்வையாக மாற்றுவார். அன்று எலியேசருக்கு உதவியாக யாருமே இல்லை. கர்த்தரை மட்டுமே நம்பி அந்த காரியத்தில் இறங்குகிறார். சரியான இடத்திற்கு தேவன் இவரை நடத்தி சென்றார். எலியேசரை சரியாக நடத்தி சென்ற நம் தேவன் இன்றைக்கு உங்களையும் நேர் வழியாய் நடத்துவாராக.. ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..